LatestNews
ஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு…

காரியாபட்டி அருகே முதல்வர் அடிக்கல் நாட்டிய, ஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு…..
தனியார் நிறுவன அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு…..
விருதுநகர் :
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் உள்ள துலுக்கன்குளம் ஊராட்சியைச் சேர்ந்தது தாமரைக்குளம்.
இந்த ஊருக்கு அருகே உள்ளது பொட்டல்குளம். இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே ஜவுளி பூங்கா அமைப்பதற்காக கடந்த 2016 டிசம்பர் 14 ஆம் தேதி அன்று கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அந்தப் பகுதியை சேர்ந்த தாமரைக்குளம், காரைக்குளம், எசலிமடை, செட்டிகுளம், கீழ காஞ்சிரங்குளம், மேல காஞ்சிரங்குளம், துலுக்கன்குளம், சி.புதூர் கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், தங்களுடைய விவசாய நிலம் பாதிப்படையும், நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்றும், எனவே இப்பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலர்களின் வாகனங்களை முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில், 22.6.2019 அன்று அப்பகுதியில் மண் பரிசோதனை மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்க முற்பட்ட போது பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் தடைபட்டது.
ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறை திறக்க அனுமதிக்க மாட்டோம். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ளதால், விவசாய பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு சாயப்பட்டறை அமைப்பதால், நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்படும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் பாதிப்பு ஏற்படுவதுடன், வருங்கால சந்ததியினர் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று கூறி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், தாமரைக்குளம்- பொட்டல்குளம் இடையே 100 ஏக்கரில் ரூ. 200 கோடி மதிப் பில் ஜவுளிப் பூங்கா தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, தமிழக முதல்வர் எடப்படாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் 25.8.2019 ல் தொடங்கி வைத்தார். காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் அ.சிவஞானம், தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமத்தின் தலைவர் இளங்கோ, திட்ட இயக்குநர் ஞானசம்பந்தம், நிர்வாக இயக்குநர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று அந்த இடத்தில் பணிகள் துவங்குவதற்காக டெண்டர் எடுத்த நிறுவனத்தினர் வந்திருந்தனர். இதனை அடுத்து அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டு வந்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக திருச்சுழி, காரியாபட்டி, விருதுநகரிலிருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பணிகள் துவக்கக்கூடாது என தொடர்ந்து ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். இங்கு பொதுமக்கள் எதிர்ப்பை மீறி எதுவும் செய்ய மாட்டோம் என தனியார் நிறுவனம் உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அந்தப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்
LatestNews
களைகட்டிய மாசி பொங்கல் விழா..

சிவகாசி பகுதிகளில் களை கட்டிய மாசி தெருக்கட்டுப் பொங்கல் விழா…..
சிவகாசி :
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாசி மாத தெருக்கட்டுப் பொங்கல் விழா களைகட்டியுள்ளது. சிவகாசி பகுதி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தெருக்கட்டுப் பொங்கல் என்று கூறப்படும், முத்தாலம்மன் திருவிழா அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில், மண் மற்றும் மஞ்சள், சந்தனத்தால் ஆன முத்தாலம்மன் உருவம் வடிவமைக்கப்பட்டு ஐந்து நாட்கள், 7 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடத்தப்படும். இதற்காக தெருக்கள் முழுவதும் வேப்பிலை தோரணம் கட்டப்பட்டு, காப்பு கட்டி விரதம் இருந்து வருவார்கள். பெண்கள் நேர்த்திகடன் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வருவார்கள். விழாவி்ன் நிறைவு நாளன்று தங்களது பகுதிகளிலிருந்து, சிவகாசி நகரில் நான்கு ரதவீதிகளில் முளைப்பாரி, பால்குடங்கள் ஏந்தி கருப்பசாமி கோவில், மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில்களுக்கு ஊர்வலமாக சென்றுவந்து தங்களது பகுதியில் உள்ள முத்தாலம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பூரண அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெருக்களில் உள்ள மக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்வார்கள். சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும். தெருக்கட்டுப் பொங்கல் ஆரம்பித்த நாள் முதல் தினமும் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு தெருவில் இருக்கும் பலதரப்பட்ட மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த தெருக்கட்டுப் பொங்கல் விழா நடத்தப்படுவதாக கூறுகின்றனர். சிவகாசி நகர் பகுதியில் மட்டும் நடந்துவந்த தெருக்கட்டுப் பொங்கல், தற்போது சிவகாசியை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.